திருவண்ணாமலை:திருவண்ணாமலை கோயிலில் தரிசனம் செய்த நடிகர் சிம்புவை படம் எடுத்த ரசிகர்களை அவரது பவுன்சர்கள் விரட்டியடித்தனர். நடிகர் சிம்பு நடித்த படம் பொங்கலையொட்டி நாளை திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சிம்பு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் அவர் காரில் கிரிவலம் புறப்பட்டார். இடுக்குப்பிள்ளையார் கோயில் அருகே காரை நிறுத்திய சிம்பு, தனது பவுண்சர்ஸ் புடைசூழ வந்தார். அவரை அங்கு திரண்டு வந்த ரசிகர்கள் படம் எடுக்க முயன்றனர். இதனை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தி விரட்டினர்.
பின்னர் இடுக்குப்பிள்ளையார் கோயிலில் தரிசனம் செய்த சிம்பு, வெளியே வந்தபோதும் ரசிகர்கள் வீடியோ எடுத்தனர். இதனால் கடும் டென்ஷன் ஆன அவர், வேகமாக சென்று காரில் ஏறி புறப்பட்டார். சிம்பு ரசிகர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தி விரட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.