×

யூடியூப் சேனல்களில் ஆபாசமான, அருவருக்கத்தக்க வகையில் பதிவு செய்த வீடியோக்களை நீக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு..!!

சென்னை: யூடியூப் சேனல்களில் ஆபாசமான, அருவருக்கத்தக்க வகையில் பதிவு செய்த வீடியோக்களை தாமாக முன்வந்து நீக்க, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த புகாரில் யூடியூப் சேனலை சேர்ந்த நிறுவனர், அதில் வேலை செய்யும் 2 பேர் என 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்நிலையில், இதேபோல பல்வேறு யூடியூப் சேனல்களில் ஆபாசமான, அருவருக்கத்தக்க வகையில் பதிவிடும் வீடியோக்களை நீக்க, சென்னை காவல் ஆணையர் ஆணை பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை மீறி ஆபாசமான வகையில் பேட்டிகள் எடுத்து யூடியூப்-பில் வீடியோ பதிவு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து சைபர் கிரைம் காவல் துறையினர் இதுபோன்ற யுடியூப் சேனல்களில் இருக்கக்கூடிய வீடியோக்களை ஆய்வு செய்யக்கூடிய பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எந்தெந்த யூடியூப் சேனல்களில் இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் வீடியோ பதிவிடப்படுகிறது? எத்தனை வீடியோக்கள் உள்ளன? யார் தலைமையில் யூடியூப் சேனல் இயங்கி வருகிறது? என்பது தொடர்பான விவரங்களை சேகரித்து  ஆபாசமான வீடியோக்களை நீக்காவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Police Commissioner ,Chennai ,removal , YouTube Channel, Porn, Record, Video, Chennai Police Commissioner
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...