வத்திராயிருப்பு : தொடர் மழையால் காட்டாற்று ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. மார்கழி அமாவாசையையொட்டி கடந்த 10ம் தேதி முதல் நாளை(ஜன.14) வரை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறையில் குவிந்தனர்.
காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். காலை 8 மணிக்கு மழை பெய்ததால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மழை நின்றதால் காலை 8.30க்கு மீண்டும் அனுமதி வழக்கப்பட்டது. இதன்பின் தொடர்ந்து மழை பெய்ததால் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் 1 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கோயில் பகுதியில் பெய்த மழையால் காட்டாற்று ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் பாதுகாப்பான முறையில் கயிறு மூலம் கீழே இறங்கி வந்தனர். அமாவாசையையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மழையை பொறுத்தே கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்குது குறித்து அறிவிக்கப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர்.