சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஊழல், அதிகார அத்துமீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையை எதிர்கொண்டு வரும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணி நீட்டிப்பு வழங்க பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விதிகளை காலில் போட்டு மிதித்து விட்டு, புகார்களுக்குள்ளான துணைவேந்தருக்கு பணிநீட்டிப்பு வழங்க துடிப்பது கண்டிக்கத்தக்கது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்கள் பதவிக்காலம் முடிவடைந்து, ஓய்வு பெற்றனர்.தற்போது அவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து ஆளுநர் ஆணையிட்டுள்ளார். இது நியாயம் அல்ல. எனவே, சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை ஆளுநர் மாளிகை திரும்பப்பெற வேண்டும். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணிநீட்டிப்பு வழங்கக்கூடாது.