ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று 2வது நாளாக ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் செய்தார். ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஆலயமணி மண்டபத்தில் வணிகர்கள் சந்திப்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது: அரசுக்கும், மக்களுக்குமான தொடர்பு வலுப்பெற்றால், இடைத்தரகர்கள் ஒழிந்து போவார்கள். சின்ன, சின்ன விஷயத்துக்குகூட லஞ்சம் கொடுத்துதான் வேலை நடக்கும் என்ற நிலை உள்ளது. இதை, மாற்றி, புதிய கலாசாரத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். படித்து முடித்துவிட்டு, வேலையில்லை என்ற நிலையை மாற்றி, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி, அவர்களே வேலை வழங்கும் நிலைக்கு உயர்த்துவோம். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
காங்கயம்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் பஸ் நிலைய வளாகத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:
விளைநிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரங்களை வைக்கக்கூடாது என்பதை ஒரு சட்டமாக கொண்டு வரவேண்டும். மாட்டு இன ஆராய்ச்சியில் இருப்பவர்கள், நமது பூர்வீக மாடுகளை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். நாட்டு மாடுகளை பேணும் விவசாயிகளுக்கு தனி ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்துள்ளோம். மூன்று வேளை உணவு சாப்பிடுபவர்கள் அனைவரும் விவசாயத்தை கவனிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. உண்ணும்போது மண்ணையும் நினைக்க வேண்டும் என்றார்.