×

இலவச டேட்டா வழங்கி வரும் அதிமுக அரசுக்கு மக்கள் ‘டாட்டா’ காட்ட தயாராகி விட்டனர்: பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இலவச டேட்டா வழங்கி வரும் அதிமுக அரசுக்கு தமிழக மக்கள் ‘டாட்டா’ காட்ட தயாராகி விட்டார்கள் என பொங்கல் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 6 இடங்களில் திமுக தலைவரும், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து, விளையாட்டு மைதானத்துக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், பொங்கல் விழா மற்றும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் பரிசு மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கி மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் எந்த பண்டிகையாக இருந்தாலும் அது முதலில் கொளத்தூர் தொகுதியில் இருந்து ஆரம்பித்து அதன் பிறகு மற்ற பகுதிக்கு செல்வதை தான் நான் வாடிக்கையாக வைத்து உள்ளேன்.

அதனால் தான் பொங்கல் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே உங்களுக்கு வாழ்த்து சொல்ல வந்துள்ளேன்.தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த வருடம் கண்டிப்பாக தை மாதம் பிறந்தவுடன் அடுத்த நான்கு மாதத்தில் கண்டிப்பாக மக்களுக்கு வழி பிறக்கும். ஆட்சியில் இருந்தாலும் சரி ஆட்சியில் இல்லை என்றாலும் சரி மக்களுக்கு நல்ல பல திட்டங்களை திமுக செய்து வருகிறது. குறிப்பாக, கொடுமையான கொரோனா காலகட்டத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக செய்து வந்துள்ளது. அரசு செய்ய வேண்டிய திட்டங்களை திமுக ஆட்சியில் இல்லை என்றாலும் தொடர்ந்து செய்து வருகிறது. திமுக ஆட்சியில் தான் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு, விதவை பென்சன் திட்டம்,  பெண்களுக்கு திருமண உதவி என அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்பட்டது. இந்த ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலமாக மகளிர் சுய உதவி குழு செயல்படாமல் இருக்கிறது. பெண்களுக்கு வழங்கக்கூடிய சுழல் நிதி வங்கிகளால் வழங்கப்படாமல் இருக்கிறது.

நீட் தேர்வுக்காக சட்டமன்றத்தில் 2 முறை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பட்டது. ஆனால், இதுவரை அந்த மசோதா என்ன ஆயிற்று என தமிழக முதல்வர் கேட்க ஆற்றல் இல்லாமல் உள்ளார். தொடர்ந்து திமுக நீட் தேர்விற்கு எதிராக குரல் கொடுக்கும். தேர்தல் முடிந்த பிறகு நாங்கள் கூறியதை செய்து விட்டு உங்களிடம் வந்து சொல்லுவேன். தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக திட்டங்கள் அறிவித்து வருகிறது. எடப்பாடி 2ஜிபி டேட்டா கார்டு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர். மக்கள் அவருக்கு ‘டாட்டா’ காட்ட தயாராகி விட்டார்கள். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில்,  வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற கொறடா சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, ரங்கநாதன், தாயகம் கவி, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : government ,speech ,AIADMK ,MK Stalin ,Tata ,Pongal , Free Data, AIADMK Government, Tata, MK Stalin
× RELATED அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...