சிவகாசி: தமிழகம் முழுவதும் தைப்பொங்கல் திருநாள் நாளைமறுநாள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள்கொத்து விற்பனை சூடுபிடித்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர், சோழவந்தான், அலங்காநல்லூர் பகுதிகளிலிருந்து கரும்புகள் விற்பனைக்காக வந்துள்ளன. சிவகாசியில் சிவன் கோயில் சந்து, மார்க்கெட், பைபாஸ், மாரியம்மன்கோயில் பகுதி, திருத்தங்கல் உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் கரும்பு விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நேற்று முதலே மகிழ்ச்சியுடன் கரும்புகளை வாங்கிச் சென்றனர்.
15 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.400ல் முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மாவட்டங்களில் இருந்து வந்துள்ள கரும்புகள் நல்ல சுவையாக இருப்பதால் பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதே போன்று பனங்கிழங்கு விற்பனையும் சூடுபிடித்துள்ளது. சுரண்டை, புளியங்குடி, திருவில்லிபுத்தூர் பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள பனங்கிழங்குகள் 15 கொண்ட ஒரு கட்டு 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது. பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளதால் நகரின் முக்கியசாலைகள் மாலை நேரங்களில் பரபரப்பாக காணப்படுகின்றன.