×

இன்னும் மீட்டர் கூட வைக்கவில்லை; மின் இணைப்பே வழங்காத வீட்டிற்கு ரூ.621 ‘கரண்ட் பில்’ சாலைக்கிராமம் மக்கள் ‘ஷாக்’

இளையான்குடி: சாலைக்கிராமம் அருகே மின் இணைப்பே வழங்காத வீட்டிற்கு மின்வாரியம் ரூ.621 ‘கரண்ட் பில்’ வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வடக்கு சாலைக்கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மனைவி பாகம்பிரியாள். இவர் அதே பகுதியில் புதுவீடு கட்டி வருகிறார். வீட்டு வேலை முடிவுறும் நிலையில், மின் இணைப்பிற்காகவும்,  மீட்டர் பொருத்துவதற்கும்  சாலைக்கிராமம் மின்வாரியத்தில் கடந்த நவம்பரில் விண்ணப்பித்தார். மீட்டருக்கு ரூ.500ம் செலுத்தினார். ஆனால் இதுவரை மீட்டர் பொருத்தவில்லை.

இந்நிலையில் பாகம்பிரியாளின் வீட்டிற்கு கடந்த வாரம் மின்வாரிய ஊழியர்கள் வந்தனர். புது வீட்டிற்கு உடனடியாக மின் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதை கேட்ட பாகம்பிரியாள், வீட்டில் மீட்டரே பொருத்தவில்லை, மின் கட்டணம் எப்படி வந்தது என அதிர்ச்சியடைந்தார். அவரது மாமா முத்துவயிரன் சாலைக்கிராமம் மின் நிலையத்திற்கு சென்று கேட்டுள்ளார். அதற்கு மின்வாரிய அலுவலர்கள் சரியான பதில் கூறவில்லை. எனவே வேறு வழியின்றி, பொருத்தாத மீட்டருக்கும், இல்லாத கரண்டுக்கும் மின் கட்டணம் ரூ.621 செலுத்தி ரசீது வாங்கி வந்தார்.

புது வீடு கட்டி மீட்டரே வைக்காத நிலையில், கரண்ட் இல்லாமல் கட்டணம் வசூல் செய்து, அதற்கு ரசீதும் கொடுத்தது சாலைக்கிராமம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : house ,Village , Not even meters yet; Rs 621 'current bill' for a house without electricity
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்