×

நிர்வாகிகளுக்கு அதிமுக உத்தரவு எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டும்

சென்னை: அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள் வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு ராயப்பேட்டை அதிமுக தலைமை கழகத்தில்  கொண்டாடப்பட உள்ளது. எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி என பல்வேறு நிலைகளில் பணியாற்றும் நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் அனைவரும் ஆங்காங்கே அமைந்திருக்கும் எம்.ஜி.ஆரின் உருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும். புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் செயல்பட்டு வரும் கழக அமைப்புகளும் அங்கே அமைந்திருக்கும் எம்.ஜி.ஆரின் உருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : AIADMK ,executives ,MGR , AIADMK orders executives to celebrate MGR birthday
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...