×

இலங்கையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஸ்டிரைக்: மீன்துறை டோக்கன் அலுவலகம் முற்றுகை

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. மீன்பிடிக்க செல்ல தயாராக இருந்த சிறிய விசைப்படகுகளுக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து மீன்துறை டோக்கன் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட் 36 தமிழக மீனவர்கள் இன்று வரை விடுவிக்கப்படாமல் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் 9 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பெரிய விசைப்படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதனால் 400க்கும் மேற்பட்ட பெரிய விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் ராமேஸ்வரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, இறால் மீன்பிடிக்க செல்லும் 200க்கும் மேற்பட்ட சிறிய விசைப்படகுகள் வழக்கம் போல் இன்று காலை கடலுக்கு செல்ல டீசல் பிடித்து ஐஸ்கட்டிகளை ஏற்றி தயாராக நின்றிருந்தன.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் உள்ள மீன்துறை அனுமதி டோக்கன் அலுவலகத்தில் மீனவர்கள் டோக்கன் வாங்க சென்றனர். ஆனால் சிறிய மீன்பிடி படகுகளுக்கு அனுமதி டோக்கன் வழங்கக்கூடாது என்று பெரிய விசைப்படகு மீனவர்கள் டோக்கன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சிறிய விசைப்படகு மீனவர்கள் டோக்கன் வாங்க வரவிடாமல் தடுத்தனர். அரசு மீன்பிடிக்க செல்வதற்கு எவ்வித தடையும் அறிவிக்காத நிலையில் கடலுக்கு செல்ல தங்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும் என சிறிய படகு மீனவர்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இதனால் ராமேஸ்வரம் கடற்கரையில் இருதரப்பு மீனவர்களிடைய வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழ்நிலை நிலவியது.  

 மீன்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன், ஏஎஸ்பி தீபக் சிவாஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பெரிய படகு மீனவர்களுக்கு ஆதரவாக மீன்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் வழங்காவிட்டாலும், டோக்கன் பெறாமலேயே மீன்பிடிக்க கடலுக்கு செல்வோம் என சிறிய மீன்பிடி படகு மீனவர்கள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து நிலையில், மதியத்திற்குள் சிறிய படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் பிரச்னை வருவதே பெரிய விசைப்படகு மீனவர்களால்தான்.

இலங்கை கடலுக்குள் சென்று பெரிய படகுகள் சிக்கிவிட்டால் மீனவர்களை விடுவிக்க வேலைநிறுத்தம் செய்கின்றனர். இது தொடர்கதையாக உள்ளது. பெரிய விசைப்படகு மீனவர்களால் சிறிய படகு வைத்திருக்கும் நாங்களும் தொழில் பாதித்து வருவாய் இழக்கும் நிலை ஏற்படுகிறது. அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.


Tags : Fishermen ,release ,Rameswaram ,Sri Lankan , Fishermen strike in Rameswaram demanding release of Sri Lankan fishermen: Fisheries token office besieged
× RELATED இலங்கை சிறையிலிருந்து...