×

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்: முத்தரசன்

வேலூர்:வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடித்து அகற்றியது வன்மையாக கண்டிக்கதக்கது. மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறவில்லை. இதனை கண்டித்து போகி திருநாளான வரும் 13ம் தேதி மூன்று வேளாண் சட்ட நகல்களை தீ வைத்து எரிக்கும் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கலந்துகொள்ளும்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ, தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

அவர்கள் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டும். அமைச்சர்களின் மீது திமுக அளித்த ஊழல் பட்டியலை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆளுநர், மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படுகிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று கூறிவிட்டார். அவர் நல்ல படங்களை நடித்து மக்களுக்கு தர வேண்டும். திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. சீட்டுகள் குறித்து பின்னர் தெரிவிப்போம்.

பாஜகவில் சேர தொழிலதிபர்களை மிரட்டுகிறார்கள். சில அரசியல் கட்சியை சேர்ந்தவர்களையும் மிரட்டுகின்றனர். அப்படி அடிபணியாதவர்களை அமலாக்கதுறையை கொண்டு மிரட்டுகின்றனர். இது கண்டிக்கதக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Pollachi , Pollachi, Sex, Mutharasan
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!