டெல்லி : நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் நிலையில், உருமாறிய கொரோனா தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது. இதனிடையே நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார். மதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதேபோல், அந்தந்த மாநில முதல்வர்கள் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.
இதனிடையே தடுப்பூசி திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான பூர்வாங்க பணிகளும் நடைபெற்று வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தில் இருந்து ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி இன்று மாலை அல்லது நாளை (ஜன. 12) முதல் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் சீரம் நிறுவனத்திடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.