வி.கே.புரம் : பாபநாசம் வனச்சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கான நேரம் காலை 8மணி முதல் மதியம் 3மணி வரை மாற்றப் பட்டுள்ளது. பாபநாசம் முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் சொரிமுத்தய்யனார் கோயில் உள்ளது. இது பாதுகாக்கப்பட்ட பகுதியாக திகழ்வதால் சுற்றுலா பயணிகள் காலை 6மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே பாபநாசம் வனச்சோதனை சாவடி மூலம் அனுமதிக்கப் பட்டனர்.
ஆனால் பாபநாசம் வனச்சோதனை சாவடி சுற்றுலா பயணிகள் செல்வதற்கான நேரம் காலை 8மணி முதல் மதியம் 3மணி வரை மாற்றப்பட்டுள்ளது. இந்த நேரமாற்றம் வருவாய்துறையினர் உத்தரவுபடி நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது.
வரும் 31ம் தேதி வரை இந்த நேர மாற்றம் அமலில் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். விடுமுறை நாளான நேற்று சொரிமுத்தய்யனார் கோயிலுக்கு அதிக அளவு கூட்டம் இருந்தது. பக்தர்களின் வாகனங்கள் வரிசையில் நிறுத்தப்பட்டு சோதனைக்குப்பின் அனுமதிக்கப்பட்டன. பாபநாசம் தாமிரபரணி ஆற்று படித்துறைகளில் ஏராளனமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.