சென்னை: சென்னையில் உள்ள பூங்காக்களை தத்தெடுக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். இதன்படி பசுமை சென்னை திட்டத்தின் கீழ் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் ஆகியவற்றை தத்தெடுக்கலாம். பொதுமக்கள், குடியிருப்பு நலச்சங்கங்கள், தனியார் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் ஆகியோர் பூங்காக்களை தத்தெடுத்து பராமரிக்கலாம். தத்தெடுக்க முன்வருபவர்கள் அவர்களின் பெயர் பலகைகளை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். இதற்கு முன்பாக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு சதுர மீட்டருக்கான தொகை ரூ.100 மற்றும் பிணை வைப்புத் தொகை ரூ.50 ஆயிரமும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பூங்காவை தத்தெடுக்க முன்வர வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.