நாகை: நாகூர் தர்கா கந்தூரி விழா வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி இன்று 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது. நாகை அடுத்த நாகூரில் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு இஸ்லாமியர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். இவ்வாறு புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 23ம் தேதி சந்தனம் பூசுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களிலும் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடந்தது. தர்கா பரம்பரை கலிபா முகமதுமஸ்தான் சாகிப் துவாஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து சாகிப் மினராவில் பாய்மரம் ஏற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தஞ்சையை ஆட்சி செய்த மாமன்னர் ராஜராஜசோழன் கட்டி கொடுத்த பெரிய மினரா, தலைமாட்டு மினரா, ஒட்டுமினரா, முதுபக்மினரா என 5 மினராக்களில் பாய் மரம் ஏற்றப்பட்டது.இதில் ஏராளமானோர் கொட்டும் மழையில் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து சர்க்கரை இனிப்பு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நாகூர் தர்கா ஷரீப்பரம்பரை டிரஸ்டிகள் மற்றும் தற்காலிக நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.