புதுடெல்லி: உலகளவில் பரவும் பெரும்பாலான வைரஸ் நோய்களின் மூலக்காரணமாக உள்ள சீனாவில்தான், பறவைக் காய்ச்சலுக்கான வைரசும் 25 ஆண்டுகளுக்கு முன் உருவாகி இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் தோன்றி, தற்போது வரை உலகையே அச்சுறுத்தி, அலற வைக்கும் கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்து தோன்றியது. உலகளவில் இதுவரை இந்த வைரசால் 8 கோடியே 89 லட்சத்து 69 ஆயிரத்து 386 பேர் பாதித்துள்ளனர். மேலும், 19 லட்சத்து 15 ஆயிரத்து 6 பேர் பலியாகி உள்ளனர். அதே போல், இந்தியாவில் 1 கோடியே 4 லட்சத்து 31 ஆயிரத்து 639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 லட்சத்து 50 ஆயிரத்து 798 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் தற்போது புதிதாக பறவை காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அரியானா, இமாச்சல், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இது பரவி இருப்பதை உறுதிப்படுத்தி உள்ள மத்திய அரசு, இந்த நோய் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநிலங்களையும் எச்சரித்துள்ளது.
இந்த பறவை காய்ச்சல், ‘எச்5என்1’ என்ற வைரஸ் மூலம் பரவுகிறது. ‘வைரஸ்களின் தாயகம்’ என அழைக்கப்படும் சீனாவில் இருந்துதான் முதன் முதலில் 1996ல் வாத்துகள் மூலம் இது தோன்றியுள்ளது. பிறகு, 1997ல் ஹாங்காங்கில் பறவை சந்தையில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட பறவைகளிடம் இருந்து, மனிதர்களுக்கும் நோய் பரவியது. பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவும் என்பது அப்போதுதான் முதன் முதலில் உறுதி செய்யப்பட்டது. இது, எச்5என்1 என்ற வைரசின் உருமாறிய வைரசாகும். இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 18 பேரில் 6 பேர் இறந்தனர். அப்போது முதல், உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய பறவைக் காய்ச்சல், இந்தியாவில் முதல் முறையாக 2006ல் மகாராஷ்டிராவில் கோழிகளை தாக்கியது. பொதுவாக, பறவைகளின் நீர்த்துளிகளில் இருந்து தோன்றும் இவ்வகை வைரஸ்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் மூலமே தோன்றுவதாகவும், வீடுகளில், பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழி, வாத்து ஆகியவற்றின் மூலம் பரவாது என்று கூறப்படுகிறது.