சென்னை: தி.நகர் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தி.நகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, மேற்கண்ட பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலர், பெட்டிக் கடைகளில் கஞ்சா பொட்டலங்களை வாங்கி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பெட்டிக் கடைகளில் போலீசார் சோதனை செய்தபோது, கஞ்சா பொட்டலங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக, கேரள மாநிலம், மலப்புலா பகுதியை சேர்ந்த யூசுப், லுக்மேன் மற்றும் நந்தனம் பகுதிைய சேர்ந்த அரவிந்தன் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள் மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.