கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்செயா. இவர் இலங்கைக்காக 6 டெஸ்ட் மற்றும் 36 ஒருநாள், 22 டி.20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு காலேயில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் விதிக்கு புறம்பாக அளவுக்கு அதிகமாக முழங்கையை வைத்து பந்துவீசியதால் ஒரு ஆண்டு தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டது. இந்நிலையில் தடை காலம் முடிந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐசிசியின் அங்கீகாரம் பெற்ற மையத்தில் தனஞ்செயா தனது பந்துவீச்சை நேரில் மதிப்பீடுக்கு உட்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இலங்கை கிரிக்கெட் வழங்கிய தனஞ்செயாவின் பந்துவீச்சு நடவடிக்கையின் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தது, மீண்டும் பந்துவீச அனுமதி அளித்துள்ளது.