சென்னை: செங்கல்பட்டு திருமணி பகுதியில் 600கோடி செலவில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் கட்டி முடிக்கப்பட்டு உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த மையத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜபாஸ்கர் ஆகியோர் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து, நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ‘‘செங்கல்பட்டு திருமணி பகுதியில் 600 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் பல வகையான தடுப்பூசிகள் தயாரிக்கும் வகையில் தொழிற்சாலை கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகம் 100 ஏக்கரில் அமைந்துள்ளது. இதனை முழு வீச்சில் நடத்த இன்னும் 150 கோடி நிதி தேவைப்படுகிறது. இது குறித்து, பிரதமரிடம் ஆலோசித்து விரைவில் தடுப்பூசி வளாகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக நோய்தொற்று குறைந்துள்ளது.’’ இவ்வாறு அவர் கூறினார்.