×

ரேஷன் கடைகள் முன்பு அதிமுக பேனர்களை வைக்கக் கூடாது : ஆளுங்கட்சிக்கு குட்டு வைத்த நீதிபதிகள்

சென்னை : பொங்கல் பரிசு வழங்கப்படும் ரேஷன் கடைகளின் முன் விளம்பர பேனர்கள் வைக்க கூடாது எனவும், வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, 2,500 ரூபாய் ரொக்க பணம் உள்பட பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.இதற்கான டோக்கன்களில் முதல்வர், அமைச்சர்கள் புகைப்படங்கள் இடம்பெற தடை கோரி திமுக சார்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டோக்கன்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படங்களை அச்சிடக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.ஆனால், பொங்கல் பரிசு தொடர்பாக ஆளுங்கட்சியினர், ரேஷன் கடைகள் முன் பேனர்கள் வைத்துள்ளதாக கூறி, திமுக தரப்பில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ்பானர்ஜி மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ரேஷன் கடை அருகில் விளம்பரம், பேனர் இருக்க கூடாது என்றும், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதேபோல, ரேஷன் கடைகளுக்குள் விளம்பர துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால், அவற்றை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.அதேசமயம், பொங்கல் பரிசு தொகுப்பு பையில் முதல்வர், மறைந்த முன்னாள் முதல்வர் படங்கள் இடம் பெற அனுமதித்து நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.

Tags : Ration shops ,Judges ,AIADMK ,party , Ration shops, AIADMK banner, ruling party, judges
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...