சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத். இவரது மனைவி ஜேன் மார்பக புற்றுநோயால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். இதையடுத்து மறைந்த மனைவி ஜேன் பெயரில் மெக்ராத் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இதற்கு உதவிடும் வகையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்து வரும் 3வது டெஸ்ட் பிங்க் டெஸ்டாக நடந்து வருகிறது. கொரோனா காரணமாக மைதானத்தில் 25 சதவீதம் ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதால் டிஜிட்டல் முறையில் தனது அறக்கட்டளைக்கு மெக்ராத் நிதி திரட்டி வருகிறார். இணைய தளத்தின் வழியாக ரசிகர்கள் நன்கொடைகளை செலுத்தலாம்.
இதற்கு உதவிடும் வகையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் பிங்க் சீட்டை வாங்கி உள்ளார். மேலும் தான் கையெழுத்திட்ட டெஸ்ட் ஜெர்சியை மெக்ராத்திடம் அளித்துள்ளார். இந்த ஜெர்சியை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையும் அறக்கட்டளைக்கு வழங்கப்படும். இதுதொடர்பாக சச்சின் டுவிட்டரில், உன்னதமான முயற்சிக்கு எனது ஆதரவை தருவதில் மகிழ்ச்சி. நீண்ட இடைவெளிக்கு பின் மெக்ராத்தை சந்தித்தது மகிழ்ச்சி. அவரது முயற்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் செவிலியர்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.