சென்னை: தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. எந்தவித அறிகுறியும் இல்லாமல் அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது, அவருக்கு கூடுதல் ஆக்ஸிஜன் துணை தேவையில்லை எனவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மியாட் மருத்துவமனையில் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவரது சிடி ஸ்கேன் இயல்பான நிலையில் உள்ளது. அவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. சாதாரணமாக ஒரு அறை காற்றில் கிடைக்கப்பெறும் ஆக்ஸிஜன் அளவே அவருக்கு போதுமானதாக இருக்கிறது. வேறு எந்தவிதமான கூடுதல் ஆக்ஸிஜன் துணையும் அவருக்கு தேவைப்படவில்லை. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.