சென்னை: ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் சீன செயலி பிரச்னை குறித்து அமலாக்கபிரிவு விசாரணை தொடங்கியிருக்கிறது. சீன கடன் செயலிகள் மூலம் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா? என்று அமலாக்கபிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக சீனாவுக்கு பணப்பரிவர்த்தனை எனவும் அமலாக்கபிரிவு விசாரணை நடத்தி வருகிறது. சீன ஆன்லைன் கடன் செயலி இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதுதொடர்பாக தற்கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடன் செயலி தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பெங்களூரில் 2 சீனர்கள் பின்புலமாக இருந்து 110க்கும் மேற்பட்ட நபர்களை வேளைக்கு எடுத்து 10க்கும் மேற்பட்ட செயலிகளை உருவாக்கி ஆன்லைன் மூலமாக கடன் வழங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 சீனர்கள் உள்பட 9 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த சீனர்களுக்கு எங்கிருந்து பணம் வந்திருக்கிறது என்பது குறித்து விசாரிக்க தற்போது அமலாக்கத்துறையினர் களமிறங்கியிருக்கிறார்கள். பணம் என்பது சீனர்களுக்கு ஆன்லைன் கேம் ஆப் மூலமாக வந்துகொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இதுபோன்ற கந்துவட்டி செயலிகளை செயல்படுத்துவதற்கும் அதற்கு பணம் அளிப்பதற்கும் புதிதாக ஆன்லைன் கேம் ஆப்களை உருவாக்கி அதன் மூலமாக சீனாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு முதலீடுகளை இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வந்தது முதற்கட்ட தகவலில் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவே கடன் செயலிகளின் கெடுபிடி, மோசடி குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவிடம் இருந்து அமலாக்கப்பிரிவினர் ஆவணங்களை பெற்றுள்ளனர்.