புதுடெல்லி: தேர்தலின் போது மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்றும், வாக்கு இயந்திரங்களில் அதிகப்படியான குளறுபடி உள்ளதாகவும், அதனால் தேர்தல் நேரத்தில் இந்த வகையான இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் அடுத்த மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘வாக்கு இயந்திரத்தில் அதிகப்படியான முறைகேடுகள் நடப்பதால் வாக்கு சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.