சென்னை: தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மீன்வளம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவி பொறியாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் அளித்த பரிந்துரைபடி, அதிகபட்சமாக 17 ஆயிரம் வரை ஊதியம் குறைக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம், ஊதிய குறைப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும்,இந்த வழக்கு வரும் ஜனவரி 18ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதை தொடர்ந்து உதவி பொறியாளர்களுக்கு பழைய ஊதியத்தை நிர்ணயம் செய்ய அனைத்து துறை செயலாளர்கள் கடிதம் எழுதியிருந்தனர். அப்படி பொதுப்பணித்துறை அனுப்பிய சம்பள பட்டியல் கருவூலத்துறையின் கீழ் இயங்கும் சம்பள கணக்கு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், சம்பளம் கணக்கு அலுவலகம், 1.11.2021ம் தேதி புதிய ஊதிய விகிதம் நிர்ணயம் செய்த பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி பட்டியலை திருப்பி அனுப்பியுள்ளது. இதனால், 5 நாட்களுக்கு மேலான நிலையில் உதவி பொறியாளர்கள் ஊதியம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.