கடலூர் : கடலூர் நகராட்சியில் அம்ருத் திட்டத்தில் ரூ.100 கோடியில் 25 பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டு அதில் வில்வ நகர், வரதராஜன் நகர், சுப்பிரமணியன் நகர் உட்பட 5 இடங்களில் நவீன வசதிகளுடன் பூங்காக்கள் அமைக்கப்பட்டது. இந்த பூங்காக்களும் முறையாக அமைக்கப்படாமல் பாதியில் நிற்கிறது. மேலும் இப்பூங்காக்களில் தற்போது மழைநீர் அதிகளவில் தேங்கி வடிய வழியில்லாமல் அமைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் வீணாகி வருகின்றன. மேலும் சரிவர பராமரிக்கப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது.
பூங்காக்கள் அமைப்பதில் ஊழல் உட்பட பல்வேறு காரணங்களால் நிதி வராமல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பூங்கா முழுமையாக அமைக்கப்படாமல் பாதியில் நிற்பதால் அங்குள்ள பொருட்கள் வீணாகி யாருக்கும் பயன் இல்லாமல் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்பட்டுள்ளது. ஆகையால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பூங்காக்களை சரிசெய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.