திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித் உட்பட 20 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த கடத்தலுக்கு பின்னணியாக தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் செயல்பட்டுள்ளார் என்பது விசாரணையில் வெளிவந்தது. பின்னர் அவர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டார். இதுவரை ரூ.100 கோடி தங்கம் கடத்தப்பட்டு இருக்க கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இன்று நாட்டையே உலுக்கிய கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித் உட்பட 20 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் சரித் பெயர் முதலாவது இடத்திலும், ஸ்வப்னா சுரேஷ் பெயர் இரண்டாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும் கேடி ரமீஸ், பி. முகமது ஷபி, ஏ.எம். ஜலால், இ.சைதாலவி, பி.டி. அப்து, ராபின்ஸ் ஹமீத், முகமதலி இப்ராஹிம் உள்ளிட்ட 18 பேரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பிடித்துள்ளது.