மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தில் விளைநிலங்களில் காற்றாலைகள் அமைக்கப்படும் வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு அருகே 10 கி.மீ. சுற்றளவிற்கு காற்றாலைகள் அமைக்கப்படக்கூடாது என விதிகள் உள்ளன. விதியை மீறி பலர் காற்றாலைகள் அமைத்ததும் ஆட்சியர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர். விமான போக்குவரத்துத்துறை, தூத்துக்குடி ஆட்சியரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்.11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.