சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 3.2-ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சம்பா மாவட்டத்தை மையமாக கொண்டு நண்பகல் 01.09 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இதையடுத்து, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
இதனால், எவ்வித உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. இமாச்சலப் பிரதேசத்தில் 1905-ம் ஆண்டு காங்ரா பள்ளத்தாக்கில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், 20 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.