×

தாவரவியல் பூங்காவில் ‘குயின் ஆப் சைனா’ மலர்கள்

ஊட்டி : ஆண்டு தோறும் குளிர் காலத்தில் பூக்கும் சீனாவின் அரசி என  அழைக்கப்படும்  (குயின் ஆப் சைனா) பவுலோனியா பார்சினி மலர்கள் ஊட்டி  தாரவியல் பூங்காவில் தற்போது பூக்கத் துவங்கியுள்ளது. சீனாவின் அரசி என  பவுலோனியா பார்சினி என்ற வகை மலர்கள் அழைக்கப்படுகிறது. இந்த மலர்கள்  மரங்களில் வளரக்கூடியவை. இவை சீன நாட்டில் அதிகளவு உள்ளன.

இந்த மரங்கள்  அங்கு பல்வேறு சாதனங்கள் செய்வதற்காகவும், மர இழைகள் தயாரிப்பதற்காகவும்  வளர்க்கப்படுகிறது. குளிர் காலத்தில் (டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம்  வரை) இந்த மரம் முழுவதும் உள்ள கிளைகளில் மலர்கள் பூத்துக் குலுங்கும். பார்ப்பதற்கு மரமே வெள்ளை நிறம் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில்  காட்சியளிக்கும். இதனை, சீன மக்கள் குயின் ஆப் சைனா என்று அழைக்கின்றனர்.

இவ்வகை  மரங்கள் இந்தியாவில் அரிதாகவே காணப்படுகிறது. ஊட்டி அரசு தாவரவியல்  பூங்காவில் ஒரு மரம் மட்டுமே உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சீனாவில்  இருந்து இம்மரம் கொண்டு வரப்பட்டு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மரத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் மலர்கள் பூத்துக்  குலுங்கும். ஆனால், இம்முறை கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை  பெய்ததால், பனி பொழிவு குறைந்து காணப்பட்டது. டிசம்பர் மாதத்தில் ஒரு சில  நாட்கள் உறைபனி காணப்பட்ட போதிலும், பனியின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது.  இதனால், பனி காலத்தில் பூக்கும் இந்த மரங்களில் பூக்காமல் இருந்தது.

மரம்  முழுவதும் மொட்டுக்களே காணப்பட்டது. தற்போது இம்மரத்தில் பூக்கள்  பூக்கத் துவங்கியுள்ளன. தற்போது ஒரு சில கிளைகளில் மட்டுமே மலர்கள்  பூத்துள்ளன. எனினும், இவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

கோடை சீசனுக்காக தாவரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டு வரும் நிலையில்,  பூங்காவில் மலர்கள் குறைந்தே காணப்படுகிறது. இதனால், குயின் ஆப் சைனா  மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. இதனை பலரும் புகைப்படம் எடுத்துச்  செல்கின்றனர்.

Tags : Queen ,China ,Botanical Garden , Ooty: Paulinia Parsini, Queen of China
× RELATED கண்ணாடி மாளிகையில் தூலிப், லில்லியம் மலர் அலங்காரம்