×

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல்

டெல்லி: தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்ய மத்திய சட்டத்துறை, வெளியுறவுத்துறைக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பபட்டது. தேர்தல் ஆணையத்தின் திட்டத்தை செயல்படுத்தலாம் என வெளியுறவுத்துறை பதில் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த ஆண்டே இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மத்திய சட்டத்துறையைக் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் வெளிநாடு வாழ் இந்தியர்களும் வாக்களிக்கும் விதமாக தேர்தல் விதிமுறைகள் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் மத்திய சட்டத்துறைக்கு கடிதம் எழுதி இருந்தது. அதை தொடர்ந்து வெளியுறவுத்துறையின் ஒப்புதலையும் கேட்டிருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள வெளியுறவுத்துறை இந்த திட்டத்தை அனுமதிக்கலாம் என்று ஒப்புதல் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது. தேர்தல் ஆணையம் மத்திய சட்டத்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களுக்கு முன்பாக தேர்தல் விதிமுறைகளில் உரிய திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த மாநிலங்களில் சுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் வாக்காளர்களாக பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு Form 12 மூலம் தபால் வாக்களிக்க அனுமதி வழங்க விதிமுறைகளில் திருத்தம் தேவை என்று கூறியுள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்தால் வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் நடைமுறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

Tags : Foreign Office ,Indians ,state elections ,Tamil Nadu , Tamil Nadu, 5 State Elections, Overseas Indians, Postal, Vote
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்