சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குரூப் - 1 முதல்நிலை தேர்வுக்கு ஒரு பதவிக்கு 1989 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதைவிட தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை உறுதி செய்வதற்கு வேறு புள்ளி விவரம் தேவையில்லை. தேசிய வேலைவாய்ப்பு புள்ளி விவரத்தின்படி இந்தியாவிலேயே அதிகமான வேலை வாய்ப்பின்மை விகிதம் 7.6 சதவிகிதம் தமிழகத்தில் இருப்பதாக கூறுகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகிற போது தமிழகத்தில் வேலை வாய்ப்பின்மை கடுமையாக அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நிலவிவரும் வேலையில்லா திண்டாட்டத்தை மூடிமறைத்து விட்டு, இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுவதை விட ஏமாற்று வேலை வேறு என்ன இருக்க முடியும்?. எனவே, தொழில் வளர்ச்சி குன்றி, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதை எதிர்கொள்வதற்கு உரிய நிர்வாகத் திறமையோ, தொலைநோக்குப் பார்வையோ, தொழில் வளர்ச்சிக்கான அணுகுமுறையோ இல்லாத எடப்பாடி ஆட்சியை வரும் சட்டமன்றத் தேர்தலில் அகற்றுவதன் மூலமே தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன்.