சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் சென்னையில் அளித்த பேட்டி: இந்தியாவில் கொரோனா தொற்று தடுப்பூசிகளை போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. அனைவருக்கும் இத்தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதும் வரவேற்புக்குரியது. எனினும் ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் தடுப்பூசிகளை அனைவருக்கும் போட வேண்டும். அப்பொழுதுதான் சமூக எதிர்ப்பு சக்தியை தடுப்பூசிகள் மூலம் பெற முடியும்.
முழுமையான பயனை பெற முடியும். பயனாளிகளுக்கு எந்த நிறுவனத்தின் தடுப்பூசி வழங்கப்படுகிறது என்ற விவரத்தை வெளியிட வேண்டும். ஒரு நபருக்கு முதல் டோஸாக எந்த வகை தடுப்பூசி வழங்கப்பட்டதோ, அதே தடுப்பூசியையே இரண்டாம் டோஸாகவும் வழங்கிட வேண்டும். மாற்றி வழங்கிடக் கூடாது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளில் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என அரசு அறிவித்துள்ள போதிலும், பயனாளிகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.