கல்புர்கி: கர்நாடகாவில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு அதிகமாக இருப்பதில் கல்யாண-கர்நாடக பகுதி முதலிடத்தில் உள்ளது. மாநில அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள் இறப்பது, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கல்யாண-கர்நாடக பகுதியில் பிரசவத்தின் போது தாய்-சேய் மரணம், பச்சிளம் குழந்தைகள் இறப்பு, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சிறுவர்கள் இறப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 2020ம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பில் மாநில அளவில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு 35 சதவீதமாக இருக்கும் பட்சத்தில் கல்யாண-கர்நாடக பகுதியில் 51 சதவீதமாக உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை மாநில அளவில் 41 சதவீதமாக இருக்கும் நிலையில் கல்யாண-கர்நாடக பகுதியில் 59 சதவீதமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.