×

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம்

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம் இன்று நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான கடந்த 25ம் தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் ஏழாம் நாளான கடந்த 31ம் தேதி திருக்கைத்தல சேவையும், 8ம் நாளான 1ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ராப்பத்து உற்சவத்தின் 10ம் நாளான நேற்று நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை 5 மணி முதல் காலை 6 மணி வரை உற்சவர் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நடத்தி காட்டப்பட்டது. நம்மாழ்வார்மோட்சம் நிகழ்ச்சியையொட்டி பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிரு நாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளித்தார். அதன்பின் நம்மாழ்வாரை அர்ச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் மூடினர். அதன்பின் நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை அகற்றினர்.

பின்னர் நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர். அப்போது நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசிமாலையும் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்றிரவு 8.30 மணிமுதல் 9 மணிவரை மூலஸ்தானத்தில் இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. நாளை இயற்பா சாற்றுமறையுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

Tags : Nammazhvar Motsam ,Srirangam Ranganathar Temple , Srirangam, Ranganathar Temple, Nammazhvar, Motsam
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது