×

“என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள், விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள்” : நடிகர் சிம்பு கோரிக்கை!!!

சென்னை : பாதுகாப்பு விதிகளை அதிகரித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தால் முதல்வர் பழனிசாமிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈஸ்வரன் பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்த படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானது திரையரங்குகளில் மீட்சிக்காகதான். திரை உலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும் திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம். அதற்காகத்தான் இந்த கொரோனா காலத்திலும் வெகு பிராயத்தனப்பட்டு உயிரை பணயம் வைத்து நடித்து முடித்து தொழில்நுட்ப வேலைகள்
டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சி அல்ல; இதற்காக மெனக்கெட்டு ஒவ்வொருவரும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

விஜய் அண்ணா மாஸ்டர் படம் திரையரங்குக்கு வர வேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய அந்த மீடியமிற்கு செய்யும் மரியாதை. அதில் எனது பங்கும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளில் உருவானவர்கள் மக்கள் எங்களை திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள். அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டு இருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வர வேண்டும் என பொறுத்திருந்து வெளியிடுகிறார். திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும் கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள். என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள்; விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள். திரையரங்குகள் நிறையட்டும்; கொரோனாவை தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றி பெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும். அதற்கு இந்த படங்கள் நிச்சயம் உதவும்; விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வர வேண்டும்; திரை உலகம் செழிக்க வேண்டும்.

அதற்கான வாசலை மாஸ்டரும் ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன். அரசாங்கம் கடைகள், கடற்கரை என எல்லாமே முழுமையாக திறக்கப்பட்டு விட்டன. திரையரங்குகள் முழுமையாக திறக்கப்பட்டு விட்டால் ஒழிய அந்த பழைய நிலை வராது. வசூல் நஷ்டமே ஏற்படும். அரசும் தயவுகூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து, பாதுகாப்பு விதிகளை அதிகரித்து ,திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழ் புத்தாண்டிற்குள் 100% இருக்கைக்கு மாண்புமிகு முதல்வர் உத்தரவு விட்டால் மிக்க நன்றி உள்ளவர்களாக இருப்போம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : fans ,Eeswaran ,Vijay Anna ,Actor Simbu , Actor Simbu, Chief Minister Palanisamy
× RELATED தென்கொரியாவைக் கலக்கும் 80வயது...