சென்னை: மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 14-ம் தேதி மீண்டும் சென்னை வருகிறார். துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டுவிழாவில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார். முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அதிமுக- பாஜக இடையே பிரச்னை உள்ள நிலையில் அமித்ஷா வருகிறார்.
தமிழக சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் மே 24ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இதனால் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ள சூழலில், பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வரும் 14 ஆம் தேதி சென்னை வர உள்ளார். துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வரும் அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்திடம் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அதிமுக - பாஜக இடையே ஒருமித்த கருத்துகள் இன்னும் வெளிவராத நிலையில் அமித்ஷாவின் சென்னை வருகை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்தும் பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் அமித்ஷா சென்னை வருகை தந்த போதுதான் அதிமுக - பாஜக இடையே சட்டமன்ற தேர்தலில் கூட்டணி என அறிவிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.