பெங்களூரு: மத்திய அமைச்சர் சதானந்தகவுடாவுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் பா.ஜ. மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் சதானந்தகவுடா கூட்டத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து சித்ரதுர்கா மாவட்டத்துக்கு வந்தார். அங்கு தனியார் ஓட்டலுக்கு செல்ல முயற்சித்த போது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேல் சிகிச்சைக்காக பெங்களூரு ஏர்போர்ட் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால், உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக சதானந்தகவுடாவின் மகன் கார்த்திக் கவுடா கூறி உள்ளார்.