நொய்டா: தலைநகர் டெல்லியின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ரபுபுரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முழு முராத்கரி கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுவனை கடந்த திங்கட்கிழமை அவனது தாய், அருகில் உள்ள கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வரச் சொல்லி அனுப்பினார். ஆனால், நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை. போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கடந்த 5 நாட்களாக சிறுவனை தேடி வந்தனர்.
இந்நிலையில், சிறுவன் சென்ற கடைக்கு அருகில் கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தில் இருந்த செப்டிக் டேங்கில் சிறுவனின் உடல் மிதப்பது நேற்று தெரியவந்தது. போலீசார், மீட்புப் பணிகள் குழுவினருடன் சேர்ந்து சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.