வேலூர்: தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் 60 வகையான மூலிகைகளின் பயன்பாடு குறித்த கண்காட்சி நேற்று நடந்தது. ஆர்டிஓ இதனை தொடங்கி வைத்தார். அகத்தியர் பிறந்த தினமான ஜனவரி 2ம் தேதியை தேசிய சித்த மருத்துவ தினமாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி 4ம் ஆண்டு தேசிய சித்த மருத்துவ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ேவலூர் மாவட்ட மைய நூலகத்தில் சித்த மருத்துவ சங்கம் சார்பில் கண்காட்சி நடந்தது.
வேலூர் ஆர்டிஓ கணேஷ் தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார். அரசு சித்த மருத்துவர் தில்லைவாணன், யுனானி மருத்துவர் வாசிம், புற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையம் சார்பில் டாக்டர் பாஸ்கரன் 60 வகையான மூலிகைகள் கண்காட்சியில் வைத்திருந்தார். 200 வகையான மூலப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டது. அதன் பயன்பாடுகள் குறித்து கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர். மேலும் கண்காட்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் மூலிகை மாஸ்க் இலவசமாக வழங்கப்பட்டது.