சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி ஓய்வுபெற்றார். இதனையடுத்து, இரண்டாவது மூத்த நீதிபதியான நீதிபதி வினீத் கோத்தாரி, பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து வந்தார். இந்தநிலையில் அவர் குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இதனைதொடர்ந்து அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று காணொலி காட்சி மூலம் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வழியனுப்பு விழா உரையாற்றினார். அதில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக, 2018ல் பொறுப்பேற்ற வினீத் கோத்தாரி இந்த இரண்டு ஆண்டுகளில் 8 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார் என பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் ஏற்புரையாற்றிய பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி பேசுகையில், பெருமைக்குரிய சார்ட்டர்டு உயர் நீதிமன்றமான, சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன். நான் பணியாற்றிய ராஜஸ்தான், கர்நாடகா உயர் நீதிமன்றங்களை ஒப்பிடும் போது, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் திறமையானவர்கள். இங்கு பணியாற்றிய ஒவ்வொரு நாளும் சிறந்த அனுபவமாக இருந்தது, சிறு கசப்புணர்வு கூட இல்லை. கொரோனா தொற்று காலத்தில் ஆன்லைன் மூலம் வழக்குகளை விசாரித்தது நல்ல அனுபவமாக இருந்தது. மேலும் மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்தது தனக்கு முழு திருப்தியை அளித்தது, என்று பேசினார்.