தர்மபுரி: விவசாயிகள் தற்கொலையை தடுக்கவே 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக தர்மபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர் முருகன் பேசினார். தர்மபுரி மாவட்ட பாஜக அணி மற்றும் பிரிவு பிரதிநிதிகளின் மாவட்ட மாநாடு தர்மபுரியில் நேற்று நடந்தது. மாநில செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் முருகன் பேசியதாவது: விவசாயிகளின் தற்கொலையை தடுக்கும் வகையில், அவர்களது மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஆய்வு செய்து, 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த வேளாண் சட்டங்கள் குறித்து, எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. ஒரு விவசாயி, தான் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து விற்கும் வகையில், இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது.
விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ₹6 ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக மாறியுள்ள பாஜக, தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது. பாஜகவின் வளர்ச்சி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் பதவியேற்கும் நாள், வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு முருகன் பேசினார்.