பழநி: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்று கொண்டவர்கள் மட்டுமே கூட்டணியில் அங்கம் வகிக்க முடியுமென பழநியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்த பின்பு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டி: எம்ஜிஆரை இகழ்ச்சியாக பேசும் நடிகர் கமல்ஹாசன் அரிச்சுவடி இல்லாமல் அழிந்து போவார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய பொறுப்பாளர்களை வைத்து அறிவித்து விட்டார். அதிமுக கூட்டணியில் இடம் பெறும் கூட்டணி கட்சியினர் அனைவரும், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டுதான் அங்கம் வகிக்க முடியும். இதுதான் இயல்பு. இதுதான் நடைமுறை. ரஜினிகாந்த் வெளிப்படைத்தன்மையானவர். அவர் நீண்டநாள் வாழ வேண்டும். உடல்நிலை, குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர் எடுத்த நடவடிக்கையை எல்லோரும் வரவேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
பொங்கல் பரிசுடன் 100 மில்லி நெய்
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறுகையில், ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்ததற்கான நிலுவைத்தொகை விரைவில் வழங்கப்படும். பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுப்பொருள் தொகுப்பில் 100 மில்லி ஆவின் நெய்யும் சேர்த்து வழங்கப்படும் என்றார்.