திருமங்கலம்: திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ சமபந்தி விருந்து நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது சொரிக்காம்பட்டி மற்றும் எஸ்.பெருமாள்கோவில்பட்டியில் கரும்பாறை முத்தையா சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ அன்னதானம் நடைபெறும். பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் நிறைவேறினால் முத்தையா சுவாமிக்கு கருப்பு ஆட்டுக்கிடாய் வழங்கப்படும். கோயில் சார்பில் இந்த கிடாய்களுக்கு வலது காதுவில் துளையிட்டு மேய்ச்சலுக்கு விடப்படும்.
திருவிழாவின் இந்த கிடாய்கள் வெட்டப்பட்டு அசைவ சமபந்தி விருந்து நடைபெறும். இந்த திருவிழா நேற்றிரவு துவங்கியது. 100க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டன. இதன்பின் முத்தையாசுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அசைவு உணவு சமைக்கப்பட்டு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இதில் திருமங்கலம், கரடிக்கல், சொரிக்காமபட்டி, அனுப்பப்பட்டி, செக்கானூரணி, கருமாத்தூர், உசிலம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். தரையில் அமர்ந்து விருந்து சாப்பிட்டனர். எச்சில் இலைகள் காற்றில் பறந்து செல்லும் வரை இந்த பகுதிக்கு வரமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.