சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் என்ற இடத்தில் பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திக்சன் சுத் என்பவரின் வீடு அமைந்துள்ளது. இங்கு வந்த சிலர் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷமிட்டபடி அவரது வீட்டுக்கு முன்பாக வைக்கோல் மற்றும் மாட்டு சாணத்தை கொட்டி வைத்துவிட்டுச் சென்றனர். மேலும் அவர்கள் திக்சன் சுத் வீட்டிற்கு முன்பாக மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையில், பாஜக ஆதரவாளர்கள் சிலர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தகவலறிந்த ேபாலீசாரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இந்த நேரத்தில் பாஜக ஆதரவாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அது கைகலப்பாக மாறியது. போலீசார், இருதரப்பையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இவ்விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது பிரிவு 452 (அத்துமீறல்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை பஞ்சாப் பாஜக தலைவர் அஸ்வானி சர்மா கண்டித்துள்ளார். இதுகுறித்து மாநில முதல்வர் அமரீந்தர் சிங் வெளியிட்ட அறிக்கையில், ‘விவசாய சட்டங்களுக்கு எதிராக நடக்கும் போராட்டம் முன்மாதிரியான கட்டுப்பாட்டுடன் நடைபெற்று வருகிறது.
பஞ்சாபில் எந்தவொரு வன்முறை அல்லது சட்டவிரோத செயலும் நடைபெறவில்லை. அதே போல் டெல்லி எல்லைகளிலும், அமைதியான போராட்டம் நடைபெற்று வருகிறது. இருந்தும் சிலர் தங்களது கட்டுப்பாட்டை இழந்து விரும்பத்தகாத செயல்களை செய்கின்றனர். எனவே, ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.