×

நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

சென்னை: நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘நிவர்’ புயல் கடந்த மாதம் 25, 26 ஆகிய தேதிகளில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.  ‘நிவர்’ புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு  ‘புரெவி’ புயலின் தாக்கத்திற்கு உள்ளானது.

இதனையடுத்து, தமிழக அரசு மேற்கொண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, ‘நிவர்’  மற்றும் ‘புரெவி’ புயல்களின் போது, மனித உயிரிழப்பு மற்றும் கால்நடை சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது.  எனினும், ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்கள் கரையைக் கடக்கும் போது வீசிய பலத்த காற்று மற்றும் கன மழையின் காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் மின்சாரம், சாலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான பல உட்கட்டமைப்புகளுக்கு பெரும்சேதம் ஏற்பட்டது.  இதுவன்றி, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. எனது அறிவுரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளின் காரணமாக புயல் பாதிப்பிற்குள்ளான மாவட்டங்களில் இயல்பு நிலை உடனடியாக திரும்பியது.

இப்புயலினால் ஏற்பட்ட பயிர் சேதத்தினை உடனடியாக கணக்கீடு செய்யுமாறு வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு நான் உத்தரவிட்டிருந்தேன். 8.12.2020 மற்றும் 9.12.2020 ஆகிய நாட்களில் ‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்தது போல்,  ‘புரெவி’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு 28.12.2020 முதல் 30.12.2020  வரை ஆய்வு செய்தது.  

‘நிவர்’ புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க 641.83 கோடி ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 3108.55 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 3,750.38 கோடி ரூபாய் தேவைப்படும் என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது.   மேலும், ‘புரெவி’ புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க  485 கோடி ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 1,029 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 1,514 கோடி ரூபாய் தேவைப்படும் என தெரிவித்து மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகளின் மீது எப்பொழுதும் மிகுந்த அக்கறை கொண்ட நான், ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்களின் தாக்கத்தின் காரணமாக பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் நலனை காக்கும் பொருட்டும், வேளாண் பெருமக்கள் அதிக உற்பத்தி செலவு செய்து, பேரிடரால் பெரும்பாதிப்பு அடைந்துள்ளதை கருத்தில் கொண்டும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி,

மானாவரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர்  ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகையான ரூ.13,500 என்பதை, ரூ. 20,000 உயர்த்தியும், மானாவாரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையான ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும்  ரூ. 7410 என்பதை, ரூ.10,000 உயர்த்தியும், பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.18,000 என்பதை, ரூ. 25,000 உயர்த்தியும் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். உயர்த்தப்பட்ட இடுபொருள் நிவாரணத்திற்கான தொகையை, தமிழ்நாடு அரசு வழங்கும்.

மேலும், தேசிய பேரிடர் நிவாரண வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் என்ற அளவில் மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வழிவகை உள்ளது.  இந்த பேரிடரில், அனைத்து விவசாயிகளும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள காரணத்தால் 2 எக்டேர் என்ற உச்சவரம்பை தளர்த்தி,  பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ‘நிவர்’  மற்றும் புரெவி புயல்களின் காரணமாக, பாதிப்பிற்குள்ளான 3,10,589.63 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு, சுமார் 5 லட்சம் விவசாய பெருமக்களுக்கு 600 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்படும்.  இந்நிவாரணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஜனவரி 7ம் தேதி முதல் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : Palanisamy ,Nivar ,storms , Storm, farmers, Rs 600 crore, relief, Chief Minister Palanisamy, announcement
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...