கடலூர் : கடலூர் மாவட்டத்தில் 2021ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது.கடலூர் நகரில் புனித கார்மேல் அன்னை ஆலயம், சூசையப்பர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டது. தேவாலயங்கள் பூட்டி இருந்ததால் புத்தாண்டை வரவேற்க திரண்ட பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதற்கிடையே நேற்று அதிகாலை முதல் வழக்கம் போல் தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் விசேஷ வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பொதுமக்கள் குறைந்தளவிலேயே வருகை தந்திருந்தனர்.
கடலூர் பாடலீஸ்வரர் ஆலயம், தேவநாத சுவாமி ஆலயம், செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர் ஆலயம், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் ஆலயம், ஆட்கொண்ட பெருமாள் ஆலயம், பிடாரி அம்மன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஆனால் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.
கடலூர் கடற்கரை சாலையில், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு முன்தினம் நள்ளிரவு முதல் சில்வர் பீச் பகுதிக்கு வந்த பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பினர். ஆல்பேட்டை, மஞ்சக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் தடையை மீறி புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் எச்சரித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்
கடலூர் மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி. அபிநவ் உத்தரவின் பேரில் 45 காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 1,500 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் எல்லைப்பகுதி மற்றும் பிரதான சாலைகளில் 81 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டன. கடலூர் நகரில் டிஎஸ்பி சாந்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் உள்ளிட்ட போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.