கொல்கத்தா: நீரிலும், கரையிலும் இயக்கக் கூடிய 8வது எல்சியு கப்பலை கடற்படையிடம், ஜிஎஸ்ஆர்இ நிறுவனம் வழங்கியது. கொல்கத்தாவை சேர்ந்த ஜிஎஸ்ஆர்இ எனும் கப்பல் கட்டும் பொதுத்துறை நிறுவனம், நீரிலும் கரையிலும் இயங்கக் கூடிய கப்பல்களை கடற்படைக்கு கட்டித் தர ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி 7 எல்சியு கப்பல்கள் வழங்கப்பட்ட நிலையில், 8வது மற்றும் கடைசி கப்பல் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சேர்மன் வி.கே.சக்சேனா தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் அந்தமன் நிகோபர் தீவுகளில் நிலைநிறுத்தப்படும். எல்சியு கப்பல்கள் கரையின் இறுதி பகுதி வரை பயணம் செய்யக் கூடியது. இதன் மூலம் தரைப்பகுதியில் இருந்து பீரங்கி உள்ளிட்ட கனரக பாதுகாப்பு வாகனங்களை இக்கப்பலில் எளிதாக ஏற்றி பிற இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும். மேலும், கப்பலில் சிஆர்என்-91 ரக துப்பாக்கியும் பொருத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி நீரிலும், கரையை ஒட்டிய நிலப்பகுதியிலும் தாக்குதல் நடத்த முடியும். முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பட்பத்தில், உள்நாட்டு உபகரணங்கள் மூலம் இக்கப்பல் கட்டப்பட்டுள்ளது.