சென்னை: .சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ்காந்தி சாலையில் அதிகளவில் பண்ணை வீடுகள், ரெஸ்டாரன்டுகள், பொழுதுபோக்கு மையங்கள், நட்சத்திர ஓட்டல்கள், திரையரங்குகள், சுற்றுலா தலங்கள், கோயில்கள், தேவாலயங்கள் உள்ளன. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டன்று அதிகளவில் மக்கள் கூடுவர். மது விருந்துடன் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் வைத்து ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை செய்வார்கள்.
கொரோனா தொற்று அச்சம் காரணமாக இந்தாண்டு சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் புத்தாண்டை தங்களது வீடுகளில் கொண்டாடினர். பொது இடங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இருந்தபோதிலும் அதிகாலை முதல் மக்கள் கோயில்கள், தேவாலயங்களுக்கு சென்று வழிபட்டனர். மொத்தத்தில் கிழக்கு கடற்கரை சாலை, போலீசார் விதித்த தடை காரணமாக பொதுமக்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.