×

கஞ்சா வியாபாரியிடம் லஞ்சம் பெற்ற பெண் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்

கோவை: கோவை சங்கனூர் ரோட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் நிலையம் உள்ளது. இங்கு போலீசார் கஞ்சா வியாபாரிகளிடம் பணம் வசூலித்து வந்ததாக புகார் எழுந்தது. ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த கஞ்சா வியாபாரியான விஜயகுமார் (38) என்பவர் தற்போது அதனை விட்டு கட்டிட வேலைக்கு சென்று வருகிறார். இவர் மீது கடந்த காலங்களில் பல கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த நபரை செல்போனில் அழைத்து, கஞ்சா விற்பதாக வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவோம் என மிரட்டி ரூ.1 லட்சம் கேட்டுள்ளனர். இதில் பயந்துபோன விஜயகுமார் தனது மனைவி மகேஸ்வரியிடம் சொல்லி புலம்பியுள்ளார். கடந்த வாரம் மகேஸ்வரி போலீசாரை சந்தித்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் போலீசாரோ, ‘‘இந்த தொகை போதாது. மேலும் 70 ஆயிரம் ரூபாய் தரவேண்டும்’’ என வற்புறுத்தியுள்ளனர். தொடர்ந்து மகேஸ்வரி இது தொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் அளித்த ஆலோசனையின்படி, போலீஸ் கேட்ட 70 ஆயிரம் ரூபாயுடன் அவர் நேற்று முன்தினம் மாலை சங்கனூர் ரோட்டில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அங்கே பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சரோஜினி, ஏட்டு ராமசாமி ஆகியோரிடம் பணத்தை கொடுத்தபோது அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் சுற்றி வளைத்து பணத்துடன் பிடித்தனர். 2 பேர் மீதும் லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிந்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சரோஜினி, ஏட்டு ராமசாமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். சரோஜினி கோவை சிறையிலும், ராமசாமி பொள்ளாச்சி கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். லஞ்ச வழக்கில் சிறை சென்றதால் இன்ஸ்பெக்டர் சரோஜினி மற்றும் ஏட்டு ராமசாமி ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கஞ்சா வியாபாரிகள் லிஸ்ட் சேகரித்த இன்ஸ்பெக்டர்
இன்ஸ்பெக்டர் சரோஜினி இதற்கு முன்பு ஈரோட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கோவை வந்த அவர் பழைய கஞ்சா வியாபாரிகளின் லிஸ்ட்டை சேகரித்துள்ளார். பின்னர் அவர்களின் முகவரி, செல்போன் எண்களை தெரிந்து கொண்ட அவர் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். பலரை மிரட்டி பணம் வாங்கியதாக தெரிகிறது. இதற்கு ஏட்டு ராமசாமி உடந்தையாக செயல்பட்டுள்ளார். விஜயகுமாரை மிரட்டி 3 முறை பணம் வாங்கியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். அப்போது, ரூ.1 லட்சம் பணம் கொடு, இல்லையென்றால் 15 கிலோ கஞ்சா பதுக்கியதாக கைது செய்து உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். ரூ.30 ஆயிரம் கொடுத்த நிலையில், மீதமுள்ள 70 ஆயிரம் கொடுக்க தாமதப்படுத்தியுள்ளனர். விஜயகுமாரை காவல் நிலையம் அழைத்து பேசிய சரோஜினி பணம் இல்லையென்றால் உன் பொண்டாட்டி தாலியை விற்று பணம் கொடு என மிரட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.



Tags : inspector ,cannabis dealer , Cannabis Dealer, Bribery, Female Inspector, Record, Suspended
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு